செய்திகள்

பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவு

Published On 2019-01-25 16:51 GMT   |   Update On 2019-01-25 16:51 GMT
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவடைந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:

பரமத்தி வேலூர் தாலுகாவில் கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்யப்பட்டு உள்ளது.

இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, தரத்திற்கு தகுந்தார்போல் ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறவில்லை. அதற்கு முந்தைய வாரம் நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 1,803 கிலோ தேங்காய் பருப்புகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 119 ரூபாய் 12 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 108 ரூபாய் 90 பைசாவுக்கும், சராசரியாக 117 ரூபாய் 12 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 178-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 1,752 கிலோ தேங்காய் பருப்புகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று 112 ரூபாய் 65 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக 108 ரூபாய் 85 பைசாவுக்கும், சராசரியாக 110 ரூபாய் 85 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 756-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று தேங்காய் பருப்பு வரத்து குறைந்ததோடு, அதன் விலையும் சரிவடைந்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News