ஆத்தூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு பெரியசாமி (வயது 15), கருப்பசாமி (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியசாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கருப்பசாமி அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கருப்பசாமி புத்தகப் பைகளை வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கருப்பசாமி தனது தாயார் இந்திராவின் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது மாணவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இது தொடர்பாக ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து மாணவர் கருப்பசாமி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.