செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை-கணவரிடம் சப்-கலெக்டர் விசாரணை

Published On 2019-01-24 14:14 GMT   |   Update On 2019-01-24 14:14 GMT
தேன்கனிக்கோட்டை அருகே திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (21). இவர் தளியைச்சேர்ந்த பார்வதி என்பவரை கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிபோன கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் பார்வதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் முரளிக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு சென்று பார்வதியின் உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். குடும்ப தகராறு காரணமாக பார்வதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் பார்வதி தூக்குபோட்டு இறந்ததால் ஓசூர் சப்-கலெக்டர் விமல்ராஜ் மற்றும்  அவரது கணவர் முரளி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News