செய்திகள்

திருச்செந்தூரில் வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

Published On 2019-01-20 12:58 GMT   |   Update On 2019-01-20 12:58 GMT
திருச்செந்தூரில் இன்று அதிகாலை வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருச்செந்தூர்:

மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது55). தைப் பூசத்தை முன்னிட்டு பிச்சை மணி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தனர். நேற்று இரவு இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அவரது ஊரை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் குழுவுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார்.

இன்று அதிகாலை அவர்கள் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் மற்றவர்கள் செல்ல, பின்னால் மெதுவாக பிச்சைமணி நடந்துசென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிச்சைமணி மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

சத்தம் கேட்டு மற்ற பக்தர்கள் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிச்சை மணி சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் பலியான பிச்சை மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பிச்சை மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News