ராயபுரத்தில் பிளஸ்-2 மாணவர் ஓட்டிய கார் மோதி பெண் பலி
ராயபுரம்:
ராயபுரம் வெங்கடேசன் தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி நிர்மலா (வயது 55). நேற்று முன்தினம் இவர் ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் நடந்து சென்றார்.
அப்போது வேகமாக வந்த கார் திடீரென நிர்மலா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் பார்த்த போது காரை ஓட்டி வந்தது பள்ளி மாணவர்கள் என்பது தெரிந்தது.
இது குறித்து காசிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு நிர்மலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது மண்ணடியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் என்பது தெரியவந்தது. அவர் பிராட்வேயில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
விடுமுறையில் வீட்டில் இருந்த அவர் பள்ளியில் படிக்கும் நண்பர்களுடன் காரை வெளியில் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவர் நிர்மலா மீது மோதி இருக்கிறார்.
இது குறித்து காசிமேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.