செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

Published On 2019-01-17 15:08 GMT   |   Update On 2019-01-17 15:08 GMT
கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
கடலூர் முதுநகர்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் வீடுகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். நேற்று மாட்டுப்பொங்கல் திருவிழா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காணும் பொங்கல் விழா நடக்கிறது. இந்த விழாவையொட்டி பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவார்கள்.

இதற்காக நேற்று கடலூர் துறைமுகம், அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட், முதுநகர் மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர். ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.600, சங்கரா ரூ.350, ஷீலா ரூ.300, கனவா ரூ.150-க்கு விலை போனது. மற்ற மீன்கள் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டன.

நேற்று கிருத்திகை என்பதால் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுக்கு பதிலாக சைவ உணவுகளே சமைத்தனர். இருப்பினும் காணும் பொங்கலுக்காக முன்கூட்டியே சிலர் மீன்களை வாங்கிச்சென்றதையும் காண முடிந்தது. இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்ததாலும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு மீன்கள் வாங்க சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காணும் பொங்கல் முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் பெரும்பாலான பொதுமக்கள் நேற்றே மீன்களை வாங்கிச்சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி வர தொடங்கி விட்டனர்.
Tags:    

Similar News