செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் ரோட்டில் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

Published On 2019-01-16 14:24 IST   |   Update On 2019-01-16 14:24:00 IST
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் ரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:

கோவையில் இருந்து நேற்று இரவு 7 மணி அளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னை புறப்பட்டது. அந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் நாகராஜ் ஓட்டிவந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர்காந்தி நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை மறைமலைநகரை சேர்ந்த ஆகாஷ் (வயது 31), கோவையை சேர்ந்த வெங்கடேஷ், வைஷ்ணவி (22), திருப்பூரை சேர்ந்த ஐஸ்வர்யா (26), ஈரோட்டை சேர்ந்த பிரதீப்குமார், சென்னையை சேர்ந்த சுபாஷினி (25) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுபாஷினி, வெங்கடேஷ், பிரதீப்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News