செங்குன்றம் பகுதியில் வேன், கார், டெம்போ திருடிய 2 பேர் கைது
போரூர்:
நெற்குன்றம் வரலட்சுமி நகரில் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருபவர் ராஜேஷ் கண்ணா.
கடந்த மாதம் அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்த சொகுசு வேன் திருட்டு போனது.இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நெற்குன்றத்தில் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கினர்.
அவர்கள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பதும் கடந்த மாதம் ராஜேஷ் கண்ணாவின் டெம்போ டிராவலர் வாகனத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி 2 டெம்போ, டிராவலர், சொகுசு வேன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வாகனத்தை திருடி நம்பர் பிளேட்டை மாற்றி வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரிந்தது.