செய்திகள்

பொங்கல் பரிசு பெற வரிசையில் நிற்குமாறு கூறியதால் சப்-இன்ஸ்பெக்டரின் கையை கடித்த வாலிபர்

Published On 2019-01-09 09:23 GMT   |   Update On 2019-01-09 09:23 GMT
வெங்கல் அருகே பொங்கல் பரிசு பெற வரிசையில் நிற்குமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டரின் கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியபாளையம்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதனை வாங்க ரே‌ஷன் கடைகளில் தினமும் கூட்டம் அலை மோதுகிறது.

இதேபோல் வெங்கல் அருகே பண்டி காவனூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையிலும் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த டில்லிபாபு (32) என்பவர் வரிசையில் நிற்காமல் ரகளையில் ஈடுபட்டார்.

இதுபற்றி அறிந்ததும் வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீஸ்காரர் ராஜன் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்கள் தகராறில் ஈடுபட்ட டில்லிபாபுவை வரிசையில் நிற்கும்படி கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மீது பாய்ந்து தாக்கினார். மேலும் அவரது கை, தோள் பட்டையில் கடித்தார்.

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோதலில் ஈடுபட்ட டில்லிபாபுவை சமாதானம் செய்து விலக்கினர். இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லிபாபுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News