செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே தோட்டத்து கிணற்றில் வீசப்பட்ட 4 கலசங்கள் - போலீசார் விசாரணை
அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் கிடந்த 4 கலசங்களை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலையம்பட்டி:
அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் அய்யாத்துரை என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கீரை விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று இவரது மகன் அருணாச்சலம் என்பவர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்தார். அப்போது தண்ணீர் வரவில்லை. இதையடுத்து அருணாச்சலம் தோட்டத்து கிணற்றில் இறங்கிப் பார்த்தார். அப்போது 4 கோவில் கோபுர கலசங்கள் கிணற்றுக்குள் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுண் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கலசங்களை மீட்டனர்.
இதை திருடியவர்கள் யார்? எதற்காக கிணற்றில் வீசிச் சென்றார்கள்? எந்த கோவிலின் கோபுர கலசங்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.