செய்திகள்

ஆத்தூரில் ஒரே பெண்ணுக்கு 3 பேருடன் நிச்சயதார்த்தம் - புரோக்கர் சிக்கினார்

Published On 2019-01-03 10:05 GMT   |   Update On 2019-01-03 10:05 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரே பெண்ணுக்கு 3 பேருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்த புரோக்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் கேரள மாநில பெண்களை ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் பலருக்கு திருமணம் செய்து வைக்கும் தரகர் வேலை செய்து வருகிறார். கண்ணனிடம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார்கள் சக்திவேல், விஸ்வநாதன், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே அணுகி தங்களுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூறியுள்ளனர்.

அதற்கு அவர், தனக்கு புரோக்கர் கமி‌ஷன் ரூ.25 ஆயிரம் மற்றும் கேரளாவுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, நிச்சயதார்த்த பெண்ணுக்கு மோதிரம் என ஒவ்வொருவரிடமும் ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். பின்னர் அவர்கள் 3 பேரையும் சமீபத்தில் கேரள மாநிலத்திற்கு தனித்தனியாக அழைத்து சென்று, அங்குள்ள ஒரே பெண்ணுக்கு 3 பேரையும் மோதிரம் போட்டு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார். அப்போது அவர்கள் அந்த மணப்பெண்ணை தங்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படம் தான், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் இந்த தரகரின் மோசடி வேலையை அடுத்த சில நாட்களிலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கொத்தனார்கள் 3 பேரும் அவர்கள் நிச்சயம் செய்த பெண் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

பேச்சுவாக்கில், தாங்கள் திருமணம் செய்து கொள்ள போகும் கேரள பெண்ணின் படத்தை அவர்கள் 3 பேரும் மற்றவர்களிடம் காண்பித்தனர். அப்போது தான் அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஒரே பெண்ணை நிச்சயம் செய்ததையும், தாங்கள் ஏமாற்றபட்டதையும் அறிந்து ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமண தரகர் கண்ணனிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News