செய்திகள்

மதுக்கடை முன்பு 5 வயது சிறுவன் கடத்தல்- கண்காணிப்பு கேமிராவில் பதிவு

Published On 2019-01-03 08:07 GMT   |   Update On 2019-01-03 08:07 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் தந்தை மயங்கியதால் 5 வயது சிறுவனை கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாலூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பொன்னியம்மன் கோவிலை சேர்ந்தவர் குருபிரசாத். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது 5 வயது மகன் குமரகுரு.

குருபிரசாத்துக்கு மது பழக்கம் உள்ளது. இவர் மகன் குமரகுருவுடன் ஓரகடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அங்கு மகன் குமரகுருவை கடையின் வெளியே விட்டு விட்டு குருபிரசாத் மது குடிக்க சென்றார்.

இந்த நிலையில் மகனுடன் வெளியே சென்ற கணவர் குருபிரசாத் வீடு திரும்பாததால் மனைவி முருகம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கணவரை தேடியபோது மதுக்கடை பாரில் குடிபோதையில் கணவர் குருபிரசாத் மயங்கி கிடப்பது தெரிந்தது. மகன் குமரகுருவை காணவில்லை. அவன் மாயமாகி இருந்தான்.

இது குறித்து முருகம்மாள் ஓரகடம் போலீசில் புகார் செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கன்னா உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தினார்.

மதுக்கடை அருகே உள்ள மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வேஷ்டி, சட்டை அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் சிறுவன் குமரகுருவுக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்த படி அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. அவர் குமரகுருவை கடத்தி செல்வது தெரிந்தது.

அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News