செய்திகள்

டாஸ்மாக் மதுக்கடையில் பிளாஸ்டிக் டம்ளருக்கு பதில் கண்ணாடி டம்ளர்கள் - ஒரு டம்ளருக்கு ரூ.10 வசூலிப்பு

Published On 2019-01-02 16:39 GMT   |   Update On 2019-01-02 16:39 GMT
ஈரோடு நகரில் உள்ள பல டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கிறார்கள். #Plasticban
ஈரோடு:

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகள் கடைகளில் கொடுக்கப்படுகிறது. பைகளின் தரத்திற்கு ஏற்ப 2 ரூபாய், 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கடை வியாபாரிகள் பைகளை கொடுக்கும் போது ‘‘அடுத்த தடவை வரும் போது தவறாமல் இந்த துணி பையை கொண்டு வாருங்கள்’’ என அறிவுரையும் கூறி வருகிறார்கள்.

இதே போல் இறைச்சி கடை, மீன் கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு வாழை இலை, தேக்கு மர இலை, தைல இலைகளில் கொடுத்து வருகிறார்கள்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் சரக்கு அடிக்க பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தி வருவார்கள். அதை குடிமகன்கள் பயன்படுத்தி விட்டு தூர எறிந்து விட்டு போவார்கள்.

ஈரோடு நகரில் உள்ள பல டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கிறார்கள். பிராந்தி, ரம் மற்றும் பீர் ஊற்றி குடிக்க இந்த கண்ணாடி டம்ளர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த டம்ளர்கள் சொந்தமாக குடிமகன்களுக்கு கொடுப்பது இல்லை.

ஒரு டம்ளருக்கு 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதில் ஊற்றி சரக்கு அடித்து விட்டு கண்ணாடி டம்ளர்களை அங்கேயே கொடுத்து விட்டு வர வேண்டும்.

நண்பர்கள் 5 பேர் சேர்ந்து சென்றால் 50 ரூபாய் கண்ணாடி டம்ளருக்கே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் குடிமகன்கள் குழம்பி வருகிறார்கள். #Plasticban
Tags:    

Similar News