செய்திகள்

தேனாம்பேட்டையில் தாயை கொன்று மகன் தற்கொலை

Published On 2018-12-30 10:45 GMT   |   Update On 2018-12-30 10:45 GMT
தேனாம்பேட்டையில் தாயை கொன்று மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:

தேனாம்பேட்டை தாமஸ்ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் நடேசன். இவரது மனைவி சுந்தரவள்ளி, மகன் விக்னேஷ். நடேசன் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இதனால் பெரும்பாலான நேரங்களில் சுந்தர வள்ளியும், விக்னேசும் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.

இந்தநிலையில் இன்று காலை இவர்களது வீடு நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது சுந்தரவள்ளி தரையில் பிணமாக கிடந்தார். விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சுந்தரவள்ளியின் காதில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறி உள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தரவள்ளி லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்து வந்துள்ளார்.

இதனால் வீட்டில் இருக்கும் போது சத்தம் போட்டுக் கொண்டே இருப்பாராம். இதனால் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்தார். இதன் காரணமாக பெற்ற தாய் என்றும் பாராமல் மனதை கல்லாக்கிக் கொண்டு சுந்தரவள்ளியை விக்னேஷ் வி‌ஷம் கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதன்பினர் தாயை கொன்ற வலி தாங்க முடியாமல் விக்னேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில் தான் சுந்தரவள்ளி எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

மனைவி மகனின் உடலை பார்த்து நடேசன் கதறி அழுதார். தாய்-மகனின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News