சுசீந்திரத்தில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்
நாகர்கோவில்:
சுசீந்திரம் புதுக்கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது24).
இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் இசக்கியம்மாள் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் செல்வதாக கூறி விட்டு தனது ஒரு வயது மகனுடன் சென்றார்.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் தனது தாயார் வீட்டுக்கு செல்லவில்லை. நாகப்பன் தனது மனைவியின் தாயார் வீட்டுக்கு சென்று தேடினார். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவர் இல்லை.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இசக்கியம்மாள் மற்றும் அவரது குழந்தையும் தேடி வருகிறார்கள்.
இதேபோல் புத்தளம் வீர பாகுபதி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் ராஜேஸ்வரி(வயது23). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வேலைக்குச் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வேலை முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி அவர் வேலை செய்யும் கடைக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.