தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி 3 நாட்கள் சுற்றுப்பயணம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்தோடு மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கையும், ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் நேரில் எடுத்துச் சொல்லும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திட வேண்டும் எனவும் அதில் பங்கேற்போர் பட்டியலையும் அறிவித்துள்ளார்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட 204 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தலைமைக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., ஆஸ்டின், மனுராஜ் சுந்தரம், நாமக்கல் ராஜேஷ், திருப்பூர் சுந்தரம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
அதன் முதற்கட்டமாக வருகிற ஜனவரி 8, 9, 10-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் ஊராட்சிக் கழகங்கள் வாரியாக நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
சம்பந்தபட்ட ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KanimozhiMP #dmk