முத்துப்பேட்டையில் பாரபட்சமாக நிவாரணம் வழங்குவதாக கூறி மக்கள் சாலை மறியல்
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 7 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட்டு 40 நாட்களை கடந்தும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு நிவாரணம் வழங்கவில்லை.
இந்த நிலையில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாடி வீடு உட்பட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. 17,18-வது வார்டுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது மாடிவீடுகள், காலனி வீடுகளுக்கு பொருட்கள் கிடையாது என்று மக்களை வருவாய்த்துறையினர் திருப்பி அனுப்பினர்.
இதனால் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 5மணிவரை நீடித்தது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. #gajacyclone #relief