செய்திகள்

வெள்ளகோவில் அருகே வேன் மோதி அசாம் வாலிபர் பலி

Published On 2018-12-29 11:13 GMT   |   Update On 2018-12-29 11:13 GMT
வெள்ளகோவில் அருகே வேன் மோதி அசாம் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே வேன் மோதி அசாம் வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலாதீன் (20) இவரது நண்பர் அஜ்ராவுல் அலோன் (20). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முத்தூர் தொட்டிய பாளையத்தில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு 8.30 மணிக்கு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முத்தூர் கடை வீதிக்கு வந்தனர். பின்னர் ஊருக்கு திரும்பினார்கள். அலாதீன் மோட்டார் சைக்கிளை ஓட்ட அஜ்ராவுல் அலோன் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

முத்தூர் - கொடுமுடி சாலையில் மேட்டுக்கடை என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அலாதீன் தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலே இறந்தார்.

அவரது நண்பர் அஜ்ராவுல் அலோன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News