செய்திகள்

வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2018-12-24 13:11 GMT   |   Update On 2018-12-24 13:11 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

சுரண்டை:

சுரண்டை அருகில் உள்ள வீராணத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகள் சங்கீதா (வயது 20). இவரை காணவில்லை என கிருஷ்ணன் வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி புகார் கொடுத்தார். 

இந்நிலையில் நேற்று வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் சங்கீதா, மதுரை ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் மணக்கோலத்தில் தஞ்சமடைந்தார். அப்போது சங்கீதா ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது ஆலங்குளத்தில் இருந்து கல்லூரிக்கு பாலகிருஷ்ணன் ஆட்டோவில் செல்லும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் இதையடுத்து மதுரை அழகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறினர்.

இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் சத்யவேந்தன், சங்கீதாவின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசினார். ஆனால் திருமணத்தை ஏற்க சங்கீதாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். பெண்ணுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவிட்டு சென்றுவிட்டனர். இருவருக்கும் திருமண வயதை தாண்டியதால் சங்கீதாவை, அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News