செய்திகள்
மீஞ்சூர் அருகே மதுபோதையில் கோவில் குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
மீஞ்சூர் அருகே மதுபோதையில் கோவில் குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகே குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக கிடந்தது மீஞ்சூரை அடுத்த ராமரெட்டி பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பது தெரிந்தது.
மது போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி மனைவி சுஜாதாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுஜாதா கடந்த மாதம் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் மதுபோதையில் வந்த சுரேஷ் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.