வில்லியனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர்- சிவராந்தகம் மெயின் ரோட்டில் சாராயக்கடை அருகே நேற்று காலை 73 வயது மதிக்கதக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த முதியவர் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த மணி என்பதும் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் மதுகுடிக்கும் பழக்கம் உள்ள மணி கடந்த 16-ந்தேதி மாலை சாராயம் குடிக்க வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.