செய்திகள்

மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவின் உணவு செலவு ரூ.1.17 கோடி- அப்பல்லோ அறிக்கையில் தகவல்

Published On 2018-12-18 07:18 GMT   |   Update On 2018-12-18 07:18 GMT
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ.1.17 கோடி செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். இன்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.



அதில், 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு ரூ.6,85,69,584  என்றும், ஜெயலலிதாவின் உணவுக்கு மட்டும் ரூ. 1.17 கோடி செலவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ செலவுக்கான பணம், 2016 அக்டோபர் 13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டது என்றும், ஜெயலலிதா இறப்பிற்கு பின், 2017 ஜூன் 15 ம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
Tags:    

Similar News