செய்திகள்

மேலூர்-கொட்டாம்பட்டியில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பலி

Published On 2018-12-17 12:17 GMT   |   Update On 2018-12-17 12:17 GMT
மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலூர்:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது38). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் இவர் அங்கேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் மாணிக்கம் தனது மனைவி நாகம்மை, மகன் முத்துராமன் (6), 10 மாத பெண் குழந்தை முத்து மீனா ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள வலைச்சேரிபட்டி 4 வழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகம்மை மற்றும் 2 குழந்தைகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் வசந்தி, ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலூர் அருகே உள்ள திருவாதவூரை அடுத்துள்ள பழையூரைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் திருவாரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அஜித்பாண்டி படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலூர் அருகே உள்ள சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (70). இவர் கூத்தப்பன்பட்டி 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News