செய்திகள்

பூந்தமல்லி அருகே சாலையில் வேனில் தீப்பிடித்தது- டிரைவர் கருகி பலி

Published On 2018-12-16 10:02 GMT   |   Update On 2018-12-16 10:02 GMT
பூந்தமல்லி அருகே நேற்று இரவு சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே கருகி பலியானார்.

பூந்தமல்லி:

ஓட்டேரி, செல்வபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஆதிகேசவன் (வயது 23) டிரைவர்.

இவர் நேற்று இரவு லோடு வேனில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு பூந்தமல்லி அருகே இறக்க சென்றார். பின்னர் அவர் பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரம் அருகே பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது ஆதிகேசவன் லோடு வேனை சாலை ஓரத்தில் நிறுத்தியதாக தெரிகிறது. திடீரென வேனின் பின் பக்கத்தில் தீப்பிடித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள் வேனில் இருந்த டிரைவர் ஆதிகேசவனை மீட்க முயன்றனர்.

இதற்குள் வேன் முழுவதும் எரிந்து தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய ஆதிகேசவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வேனில் பற்றிய தீயை அணைத்தனர்.

தீயில் சிக்கி பலியான ஆதிகேசவனின் உடல் கிளீனரின் இருக்கை அருகே இருந்தது. டிரைவர் இருக்கை அருகே உள்ள கதவை திறக்காமல் கிளீனர் இருக்கை அருகே உள்ள கதவை எதற்காக அவர் திறக்க முயன்றார் என்பது தெரியவில்லை.

எனவே திட்டமிட்டு வேனுக்கு தீவைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News