செய்திகள்

கஜா புயல் பாதிப்புகளுக்கு முழுமையாக உதவி வழங்காதது ஏன்?- மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2018-12-12 08:27 GMT   |   Update On 2018-12-12 08:27 GMT
கஜா புயல் பாதிப்புக்கு முழுமையாக நிதி வழங்காதது ஏன்? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டனர். #GajaCyclone #HCMaduraiBench
மதுரை:

மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவரும் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘கஜா’ புயல் பாதித்த பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவத்தினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தஞ்சை பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.


செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில் புகைப்பட ஆதாரம் இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்பட ஆதாரம் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு  விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வக்கீலிடம், கஜா புயல் பாதிப்புக்கு முழுமையாக மத்திய அரசு நிதி வழங்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

அதற்கு மத்திய அரசு வக்கீல் பதில் அளிக்கும் போது, தமிழக அரசு தகவல் தராமல் காலம் தாழ்த்துகிறது. அதனால் உரிய முடிவு எடுக்க முடியவில்லை என்றார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #GajaCyclone #HCMaduraiBench
Tags:    

Similar News