செய்திகள்

ஓமலூர் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

Published On 2018-12-08 16:31 GMT   |   Update On 2018-12-08 16:31 GMT
ஓமலூர் அருகே பயங்கரம் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர், பாலிக்கடை மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். (வயது 65). ஆடு வியாபாரம் மற்றும் கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி(60). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

நேற்று அதிகாலை வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமியை மர்மநபர்கள் தாக்கி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த லட்சுமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் நகைக்காக மூதாட்டி லட்சுமியை மர்ம நபர்கள் திட்டுமிட்டு கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதை பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

கொலையுண்ட லட்சுமியின் கணவர் சின்னப்பையனுக்கு ஆடு வியாபாரம் மற்றும் கறிக்கடை தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமாக ஊரில் நிலமும் உள்ளது.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, சின்னப்பையன் வீட்டை அவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.அதிகாலையில் சின்னப்பையன் ஆடுகள் வாங்க வெளியூர் சந்தைகளுக்கு செல்வது வழக்கம். இதை மர்ம நபர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

அதுபோல் அவரது வீட்டில் யார்? யார்? உள்ளனர். அவர்கள் எங்கு வேலை பார்க்கிறார்கள். தற்போது வீட்டில் யாரெல்லாம் வசிக்கிறார்கள்? என்பதெல்லாம் கண்காணித்து தெரிந்து கொண்டு உள்ளனர்.

இதையடுத்துத்தான் நேற்று அதிகாலை சின்னப்பையன் வீட்டின் வெளியே மர்ம நபகள் பதுங்கி இருந்துள்ளனர்.

அதிகாலை 4.15 மணிக்கு சின்னப்பையன் ஆடு வாங்க கிருஷ்ணகிரி மாவட்டம் கொந்தாரப்பள்ளிக்கு புறப்பட்டார். அவரை லட்சுமி வழியனுப்பி விட்டு வராண்டாவில் உள்ள கட்டிலில் தூங்கினார்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து லட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். அவர் சத்தம் போடவே, தலையில் பலமாக தாக்கினர். இதில் அவர் மயங்கி சுருண்டு விழுந்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்து விட்டதாக அவரது உறவினர்கள் நினைப்பார்கள் என்று கருதி லட்சுமியை கட்டிலில் போட்டு விட்டு, மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

காலை 6.15 மணிக்கு காபி கொடுக்க வந்த மருமகள் தனது மாமியார் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அவரை எழுப்பி பார்த்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மருமகள், இது பற்றி கணவர், மாமனார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் அங்கு வந்து லட்சுமியை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக மாமாங்கம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது தலையில் பலமாக அடித்துள்ளதால், உள்காயம் ஏற்பட்டு சுய நினைவு இழந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News