ராஜபாளையம் அருகே பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் திடீர் மாயம்- கடத்தப்பட்டார்களா?
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 16), முத்துக்குமார்(16) மற்றும் முகவூரை சேர்ந்த கார்த்திக் பெரியசாமி (16) ஆகியோர் பிளஸ்-1 படித்து வருகிறார்கள்.
நண்பர்களான 3 பேரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் வெளியே சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றனர்.
நீண்ட நேரமாகியும் கருப்பசாமி, முத்துக்குமார், கார்த்திக் பெரியசாமி ஆகியோர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள், தங்களது மகன்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பலனில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்கள் தாங்களாகவே எங்கேனும் சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.