செய்திகள்

ராஜபாளையம் அருகே 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது- காரணமான நபர் குறித்து விசாரணை

Published On 2018-12-07 13:14 GMT   |   Update On 2018-12-07 13:14 GMT
ராஜபாளையம் அருகே 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் இதற்கு காரணமான நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

பெற்றோர் பெரும்பாலான நாட்களில் வேலைக்கு சென்றதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனை பெற்றோரும் கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது.

சிறுமிக்கு வயிறு பெரிதாக காணப்பட்டது. இதனை காலம் கடந்து உணர்ந்த பெற்றோர் உடனே சிறுமியை ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கருவை கலைக்க முடியுமா? என டாக்டர்களிடம் கேட்டனர். நிலைமை கைமீறியதால் அதற்கு சாத்தியம் இல்லை என மறுத்து விட்டனர்.

இதனிடையே அந்த சிறுமிக்கு ஆபரேசன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. மைனர் சிறுமி என்பதால் பிறந்த குழந்தை மதுரையில் உள்ள காப்பகத்தில் ஓப்படைக்கப்பட்டது. அந்த சிறுமி விருதுநகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து கர்ப்பமாக்கிய நபர் யார்? என தெரிய வில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News