செய்திகள்

கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Published On 2018-12-04 05:25 GMT   |   Update On 2018-12-04 08:18 GMT
தமிழகம், புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRains #chennaiRains #IMD
சென்னை:

தென் மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை கொட்டியது. இதே போல் காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகம், புதுவையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தாவது:-

குமரி கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை தமிழக கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.


இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம்-புதுவையில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சோழவரத்தில் 8 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

அடுத்த 2 நாட்களை பொறுத்தவரை தமிழகம்- புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் கனமழையும் நீடிக்கும்.

சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும், ஒருசில நேரங்களில் கனமழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNRains #chennaiRain #IMD
Tags:    

Similar News