செய்திகள்
அவினாசி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
அவினாசி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள துலுக்கமத்தூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
பக்கத்து ஊர்களுக்கு சென்றுதான் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீர் பிடித்து வந்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்தனர்.
இன்று காலை துலுக்க மத்தூர் பொதுமக்கள் அங்குள்ள நால் ரோட்டில் காலி குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் பங்கேற்றனர்.
மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.