வண்டியூரில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம்
மதுரை:
மதுரையை அடுத்த டி.பெருங்குடியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவர் வண்டியூர் ராணி மங்கம்மாள் சாலையில் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று இரவு குடோனை மூடிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தல்லாகுளம், பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே அண்ணாநகர் போலீசில் ஸ்டாலின் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தில் சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வண்டியூர் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.