வக்கம்பட்டியில் வேகமாக பரவும் மர்மக்காய்ச்சல்
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், செம்பட்டி, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் டேங்கர் லாரிகளில் விற்பனையாகும் தரமற்ற தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது. இத்தண்ணீரை சிலர் காய்ச்சி பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர், 6 முதல் 10 நாட்கள் வரை சேமித்து பயன்படுத்துகின்றனர்.
இச்சூழலில், வக்கம்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் சில நாட்களாக காய்ச்சல் நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். வக்கம்பட்டியில், பெரும்பாலான வீடுகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நபர்கள் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.
இக்காய்ச்சல் பாதிப்பால், முதியோர் கை, கால்களை முடக்கும் நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுகாதாரத்துறையினர், மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.