செய்திகள்

கும்பகோணம் ஆசிரியை காரில் கடத்தல் - போலீசார் விசாரணை

Published On 2018-12-01 10:06 GMT   |   Update On 2018-12-01 10:06 GMT
கும்பகோணம் ஆசிரியை காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் இந்திராகாந்தி சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் கிரிராஜன். இவரது மனைவி மீரா. கிரிராஜன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் காயத்ரி (வயது31). இவர் கும்பகோணம் எல்.பி.எஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை காயத்ரி பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். அப்போது பள்ளியிலிருந்து மகாமகம் குளத்தின் வடகிழக்கு மூலை நுழைவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த கார் காயத்ரியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயத்ரி கீழே விழுந்ததும் அவரை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர். இதில் திருச்சி- திண்டுக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள கேமராவை ஆய்வு செய்யும் போது அதில் ஆசிரியையை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியையை மீட்க தனிப்படை பிரிவு போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News