செய்திகள்

இதமான சீதோசணம் - கொடைக்கானலில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்

Published On 2018-12-01 14:36 IST   |   Update On 2018-12-01 14:36:00 IST
கொடைக்கானலில் இதமான சீதோசணம் நிலவி வருவதால் கேரள சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கஜா புயலுக்கு பின்னர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

சுற்றுலா இடங்கள் மற்றும் பேரிஜம் ஏரி பகுதியில் விழுந்த மரங்கள், மின் கம்பங்கள் அகற்றப்பட்டதால் அங்கு சென்று சுற்றி பார்க்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவு, அதனைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது.

மேலும் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று காலை வெயில் அடித்து இதமான சீதோசணம் நிலவியது.

மேலும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இன்று காலையில் இருந்தே வாகனங்கள் அதிக அளவில் வந்தது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

முக்கிய சுற்றுலா இடங்களான பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களை சுற்றிபார்த்து நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

புத்தாண்டு பிறப்பை யொட்டி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் தற்போது இருந்தே ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொடைக்கானலில் பனிப்பொழிவு குறைந்து வெயில் அடிக்கத் தொடங்கியதால் ஓட்டல் உரிமையாளர்கள், டாக்சி டிரைவர்கள், வியாபாரிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News