வத்தலக்குண்டுவில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அன்று முதல் மனோஜ் மற்றும் தனலட்சுமி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து 3 மாதங்களாக 2 பேரும் செல்போனிலேயே பேசி வந்தனர்.
வத்தலக்குண்டுவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அப்போது மனோஜ் திடீரென தனலட்சுமியை தனக்கு பிடிக்க வில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சமரசம் செய்தபோதும் மனோஜ் திருமணம் செய்ய முன்வரவில்லை.
இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.