செய்திகள்

செஞ்சி அருகே தூக்கில் பெண் பிணம்- சாவில் சந்தேகம் என போலீசில் புகார்

Published On 2018-11-28 10:04 GMT   |   Update On 2018-11-28 10:04 GMT
செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நடுபட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45) விவசாயி. இவரது மனைவி பிரியா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை பிரியா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வெங்கடேசன் பிரியாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வெங்கடேசனின் வீட்டுக்கு வந்து பிரியாவில் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதில் பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News