அரியாங்குப்பத்தில் கோவில் உண்டியல் பணம் கொள்ளை
பாகூர்:
அரியாங்குப்பம் காளான்தோட்டம் பகுதியில் குடியிருப்புகள் மத்தியில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சமீபத்தில் சூரஷம்சாரவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணத்தை செலுத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை பூஜை முடிந்ததும் அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வழக்கம்போல் அர்ச்சகர் கோவிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.