செய்திகள்

ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது- ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-11-26 10:18 GMT   |   Update On 2018-11-26 10:18 GMT
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #MadrasHC
சென்னை:

தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், ஐஜி பொன் மாணிக்கவேல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள தன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஐஜி பொன் மாணிக்கவேல் முறையிட்டார்.

அவரது மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட அந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PonManickavel
Tags:    

Similar News