செய்திகள்

காஞ்சீபுரம்-திருத்தணி-புட்லூரில் தாசில்தார் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளை

Published On 2018-11-26 08:13 GMT   |   Update On 2018-11-26 08:13 GMT
காஞ்சீபுரம்-திருத்தணி-புட்லூரில் தாசில்தார் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், லிங்கப்பன் தெருவில் பறக்கும் படை தாசில்தார் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. நேற்று இரவு பூட்டி கிடந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை மூட்டைகட்டி அள்ளிச் சென்று விட்டனர்.

அதே பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்களை சுருட்டிச் சென்று விட்டனர்.

திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று காலை அவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். இரவு வீட்டுக்கு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

இது குறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் சங்கர். வேன் டிரைவர். இவர் சரக்கு ஏற்றி கொண்டு ஐதராபாத் சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு திருவாலங்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.14 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News