செய்திகள்
சுவர் இடிந்து விழுந்ததில் லட்சுமி இறந்து கிடக்கும் காட்சி.

கோட்டக்குப்பம் அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

Published On 2018-11-22 10:10 GMT   |   Update On 2018-11-22 10:10 GMT
கோட்டக்குப்பம் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் முத்து வீட்டில் லட்சுமி வசித்து வருகிறார்.

முத்து தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு வீட்டை பிரித்தார். சுவர் மட்டும் இடிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் லட்சுமி வெற்றிலை பாக்கு வாங்குவதற்கு கடைக்கு சென்றார். அதனை வாங்கி விட்டு வீடு திரும்பிய போது, நேற்று பெய்த கனமழையினால் பழைய வீட்டின் சுவர் இடிந்து லட்சுமியின் மீது விழுந்தது.

லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர் மீது கிடந்த செங்கற்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி பார்த்த போது பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வானூர் தாசில்தார் ஜோதிமணிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வருவாய்துறை ஆய்வாளர் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டார்.



Tags:    

Similar News