செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது- உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

Published On 2018-11-22 07:12 GMT   |   Update On 2018-11-22 07:12 GMT
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து நகர்வதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains #NEMonsoon
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இந்த வாரம் பரவலாக மழை பெய்தது. அது தற்போது வலுவிழந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களை நோக்கி நகர்கிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.

இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணமலை, வேலூர், சேலம், கரூர், ஈரோடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் மாதவரத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர், திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸ் பகுதியில் 11 செமீ மழையும், பொன்னேரியில் 10 செமீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை வடக்கு, டிஜிபி அலுவலகம், மரக்காணம், திண்டிவனம் மற்றும் பண்ருட்டியில் 9 செமீ, தாமரைப்பாக்கம், நெய்வேலியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 17 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் 45 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNRains #NEMonsoon
Tags:    

Similar News