செய்திகள்
காரிமங்கலம் பகுதியில் குண்டும் - குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
காரிமங்கலம் பகுதியில் குண்டும் - குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்து பைசுஅள்ளியில் இருந்து பூமாண்ட அள்ளி மோதூர் செல்லும் பிரதான சாலை பாலிடெக்னிக் கல்லூரி, பூமாண்டஅள்ளி, கோவிலூர், புலிக்கரை, மாட்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது.
இந்த சாலையில் சுமார் 3 கி.மீட்டர் தொலைவிற்கு ஜல்லி, கற்கள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன்கருதி பழுதடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.