புதுவையில் இருந்து பண்ருட்டிக்கு மது பாட்டில்கள் கடத்திய தந்தை-மகன் கைது
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நேற்று மாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் அந்த மொபட்டை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அதில் 152 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த கோவிந்தன் (வயது 44), அவரது மகன் வெங்கடேசன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரிந்தது.
உடனே 2 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய கோவிந்தன், அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.