செய்திகள்

ராசிபுரத்தில் விவசாயி வீட்டில் ரூ.45 ஆயிரம் திருட்டு

Published On 2018-11-19 10:49 GMT   |   Update On 2018-11-19 10:49 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 52). விவசாயி. இவர் ராசிபுரம் ஒரு வழிப்பாதை அருகில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

ராசிபுரத்தில் உள்ள வீட்டில் விவசாயி மாதேஸ்வரன், அவரது மனைவி தமிழ்செல்வி (46), நவீன் (23) மவுரீஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் நவீன் சிவில் என்ஜினீயர். மவுரீஸ்வரன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மாதேஸ்வரன் அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு ராசிபுரம் அருகேயுள்ள பட்டணத்தில் உள்ள அவர்களது தோட்டத்திற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் இன்று காலையில் அவரது மூத்த மகன் சிவில் என்ஜினீயரான நவீன் ராசிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் வீட்டின் வெளிக்கதவு திறந்து கிடந்ததை கண்டார். இது பற்றி பட்டணத்தில் இருந்த அவரது பெற்றோருக்கு தகவல் தந்தார். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மர்ம நபர்கள் வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளனர். பிறகு அவர்கள் சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த விளக்கை பற்ற வைத்து படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவின் மீது வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்துள்ளனர். ஆனால் லாக்கரை அவர்களால் திறக்க முடியாததால் அதை நெம்பி திறந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை கலைத்து போட்டுள்ளனர். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணப்பையில் இருந்த ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கண்டு மாதேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் ராசிபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News