செய்திகள்
நங்கவள்ளி-மேச்சேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த காட்சி.

ரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Published On 2018-11-17 06:40 GMT   |   Update On 2018-11-17 06:40 GMT
மேச்சேரியில் ரூ.158.64 கோடி மதிப்பிலான நங்கவள்ளி-மேச்சேரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #TNCM #edappadipalaniswami
நங்கவள்ளி:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேச்சேரி, வீரக்கல்புதூர், பி.என்.பட்டி, நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட 698 குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்குவதற்காக ரூ.158.64 கோடியில் நங்கவள்ளி-மேச்சேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக மேச்சேரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

தொடர்ந்து வனவாசியில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறைகளின் புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.



பின்னர் மாலை 3 மணிக்கு எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேலம் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதில் மாவட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சேலம் சேகோசர்வ் இரும்பாலை பிரிவு ரோட்டில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

பின்னர் ரூ.30 கோடியில் சேலத்தாம்பட்டி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான பூமி பூஜையை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். மேலும் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதையொட்டி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #TNCM #edappadipalaniswami

Tags:    

Similar News