செய்திகள்

சோழவந்தான் அருகே விபத்து- புதுமாப்பிள்ளை பலி

Published On 2018-11-16 11:47 GMT   |   Update On 2018-11-16 11:47 GMT
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
சோழவந்தான்:

வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது மகன் கார்த்திக் (வயது 27). டிரைவரான இவருக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் அதே கிராமத்தை சேர்ந்த நண்பர் சீனிவாசன் என்பவருடன் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இருவரும் ஊருக்கு புறப்பட்டனர்.

வாடிப்பட்டி அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

கார்த்திக், சீனிவாசன் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். சீனிவாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணமாக இருந்த புதுமாப்பிள்ளை கார்த்திக் விபத்தில் பலியானது அவரது உறவினர் மட்டுமின்றி கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News