மதுரவாயல் அருகே மதுபோதை தகராறில் பீர்பாட்டிலால் தாக்கப்பட்ட பார் ஊழியர் பலி
போரூர்:
மதுரவாயல் ராஜீவ்காந்தி நகரில் உள்ள மதுபான பாரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சத்யராஜ் (வயது30), தர்மராஜ்(32) ஆகியோர் வேலைபார்த்து வந்தனர்.
நண்பர்களான இருவரும் கடந்த 6ந் தேதி தீபாவளியன்று இரவு ஒன்றாக மது அருந்திவிட்டு பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தர்மராஜ் பீர் பாட்டிலால் சத்யராஜ் தலையில் அடித்தார்.
இதில் பலத்த காயமடைந்த சத்யராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தையல் போட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி தலையில் வலியால் துடித்த சத்யராஜை உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பார் ஊழியர் தர்மராஜை தேடி வருகின்றார்.