செய்திகள்

கஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2018-11-14 10:09 GMT   |   Update On 2018-11-14 10:09 GMT
கஜா புயல் நாளை கரையை கடக்கும்போது 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
சென்னை:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும்  நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றின் அமைப்பைப் பொருத்து புயலின் வேகம் இருக்கும். நாளை மாலை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.



அப்போது, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை நாளை முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #TNRains
Tags:    

Similar News