செய்திகள்

வேடசந்தூர் அருகே 3 ஆசிரியைகள் வீடுகளை உடைத்த கொள்ளையர்

Published On 2018-11-13 11:04 GMT   |   Update On 2018-11-13 11:04 GMT
வேடசந்தூர் அருகே 3 ஆசிரியைகளின் வீடுகளை உடைத்த கொள்ளையர்கள் 20 பவுன் நகைகளை அள்ளி சென்றனர்.

வேடசந்தூர்:

வேடசந்தூர் ஆர்.எச். காலனி குறிஞ்சி நகரில் வசிப்பவர் மாரிமுத்து (வயது40). இவரது மனைவி முத்துவேலம்மாள் (37). மாரப்பன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார்.

நேற்று காலை கணவன்- மனைவி 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

நகை பணம் எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரிய வந்தது.

இதேபோல் அருகில் உள்ள சகுந்தலா (40) என்ற ஆசிரியையின் வீட்டுக்குள்ளும் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். இவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் சமுதாய கூடம் அருகில் உள்ள போக்குவரத்து ஏட்டு ரத்தினகிரி (40) என்பவரது வீட்டையும் உடைத்துள்ளனர். இவரது மனைவி நாகலட்சுமி கூத்தாங்கல்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்கள் வீட்டிலும் நகை, பணம் எதுவும் சிக்க வில்லை. இதனால் அங்கிருந்த பொருட்களை வீசி விட்டு சென்று விட்டனர்.

அடுத்தடுத்து 3 வீடுகளை கொள்ளையர்கள் ஒரே நாளில் பட்டபகலில் உடைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News