ராசிபுரத்தில் நெசவு தொழிலாளி மாயம்
ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் நரசிம்மன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 62). நெசவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி நெல்லை மாவட்டம், தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது நண்பர் ஒருவருடன் சென்றிருந்தார். விழாவில் கலந்து கொண்டுவிட்டு ரெயிலில் புறப்பட்டு ராசிபுரத்திற்கு வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த மாதம் 20-ந் தேதி விடியற்காலையில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர்.
பிறகு அங்கிருந்து ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய சந்திரன் அவரது நண்பரை வீட்டுக்கு போகச் சொல்லியுள்ளார். ஆனால் சந்திரன் அவரது வீட்டுக்கு செல்லவில்லை.
தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கு சென்றவர் ஊர் திரும்பிய நிலையில் வீட்டுக்கு திரும்பி வராததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இது பற்றி சந்திரன் மனைவி சாந்தி (59) தனது கணவர் மாயமானது குறித்து ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இது பற்றி ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.